Saturday, October 23, 2010

அறநெறி அறிவு நொடி! 74 to 81

74) மயிலின் முக்கியமான பண்பு எது?
அதன் அழகான தோற்றமும், ஒயிலாக ஆடும் நடனமும்தான்.
 
75) மயில் கவர்ச்சியாக தோன்றுவதற்கு எது காரணமாக இருக்கிறது?
நீலமயமான வண்ணம்

76) முருகனுக்கு மயிலை வாகனமாக வைத்திருப்பதற்குரிய தத்துவம் என்ன?
மயிலின் அழகான தோற்றமும் ஒயிலாக ஆடும் நடனமும் தான் தன் முக்கியமான பண்பாகும். அவை கவர்ச்சியாக தோன்றுவதற்கு நீலமயமான வண்ணம்தான் காரணமாக இருக்கிறது. மயில், தான் அழகாக ஆடுவதாக நினைக்கும் போது அந்தக் கர்வத்தை அடக்க ஒருவர் அதன் மீது அமர்ந்து கட்டுப்படுத்த வேண்டி இருக்கிறது.
மனிதன் எப்போதும் தன்னைப் பற்றியே எண்ணிக் கர்வப்படுகிறான். தனக்கு அழகான உடம்பு இருப்பதாக நினைக்கிறான். தன்னால் நினைத்து திட்டமிடக் கூடிய மனம் இருப்பதாக எண்ணுகிறான்.
கற்பனை சக்தி மிகுந்த சிந்தனையால் எதையும் திறமையுடன் சாதிக்க முடியும் என்று கருதுகிறான். இதில் ஊறிப்போகும் மனிதனால் தனக்குள் ஆண்டவன் இருப்பதை உணர முடிவதில்லை.
இந்த நிலையிலிருந்து அவன் மாற வேண்டும். அவனுள் இருக்கும் ஆத்மாவே அவனுடைய உண்மையான வடிவம் என்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டும். கடவுள் அந்த பண்பட்ட மனதை வாகனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இதையே கர்வத்துடன் ஆடும் மயிலின் மீது அமரும் சுப்பிரமணியர் நமக்கு உணர்த்துகிறார்.
 
77) மயில் பாம்பை மிதிப்பது போல் வைத்திருப்பதன் தத்துவம் என்ன?
மயிலுக்கும் பாம்புக்கும் பகைமை உண்டு. மயில் பாம்பை கொல்லுவதில்லை. ஆனால் மிதித்து அடக்கி வைக்கிறது.
அதைப் போல உலக பந்தங்கள் ஆசைகள் எல்லாமே நமக்கு ஓரளவேனும் வாழ்க்கையில் கூடவே இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் நாம் ஆன்மீக முன்னேற்றம் அடைய வேண்டுமானால் இவற்றை முழுவதுமாக அழிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வைக்க வேண்டும்.
இதையே மயில் காலடியில் மிதித்து அடக்கி வைக்கும் பாம்பு நமக்கு உணர்த்துகிறது.
 
78) தெய்வத்திற்கெல்லாம் தெய்வம் யார்?
பிள்ளையார்.
 
79) பிள்ளையாருக்கு விநாயகர் என்ற பெயர் எதற்கு?
தெய்வத்திற்கெல்லாம் முதல்வன் பிள்ளையார். எனவேதான் விநாயகர் என்று புராணங்களும் சாஸ்திரங்களும் பிள்ளையாரை போன்றுகின்றன.
 
80) விநாயகர் என்ற நாமத்தின் பொருள் என்ன?
தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் என்று பொருள்.
 
81 )எல்லாம் விதிப் பயன் எனும் போது இறைபூஜைகளும் திருவிழாக்களும் எதற்காக?
இறைபூஜைகளும் திருவிழாக்களுமே விதிப் பயனால் தானே!
விதியின் அடிப்படையில்தான் நம் வாழ்க்கை என்றாலும் ஆன்மீக சாதனைகள் செய்யும் போது விதியின் வேதனை நம்மைத் தாக்குவதில்லை. மேலும் இப்பிறவியில் நாம் செய்யும் ஆன்மீக சாதனை மறுபிறவியில் நல்ல விதிப் பயனை கொடுக்கவல்லது.
விதியை மதியால் வெல்லலாம் என்பது கோட்பாடு. விதிப்பயன் தீயதாக இருந்தால் ஆத்மசாதனம் என்ற மதியால் விதியை வெல்லலாம். ஆத்ம சாதனை செய்ய வேண்டிய மதியைக் கொடுப்பதும் விதிதான்.