Saturday, November 20, 2010

மூலிகை கஷாயம்

Homemade herbal drink - Muliggai Kasheayam - Food Habits and Nutrition Guide in Tamil சளி, இருமல், தொண்டை வலி, தொந்தரவுகளுக்கு வீட்டிலேயே நாம் இயற்கை மூலிகைகளை உபயோகித்து கஷாயம் செய்து பருகலாம். இயற்கை மூலிகைகளை பயன்படுத்தினால் பக்க விளைவு இல்லாமல், எதிர்ப்பு சக்தி குறையாமல் இருக்கும்; உடனடி பலனும் கிடைக்கும்.

இருமல், சளி கஷாயம்:
நாட்டு மருந்து கடைகளில் பொடியாகவே தயாரித்து 50 கிராம் ரூ.10 முதல் 15 வரை கொடுக்கிறார்கள். அதிமதுரம், தூதுவளை, சித்தரத்தை, வில்வம், திப்பிலி, சுக்கு, வால்மிளகு, போன்றவற்றை பொடியாகவும் வாங்கலாம். தவிர வெற்றிலை, துளசி, புதினா, கற்பூரவல்லி போன்ற இலைகள் பல வீடுகளில் தோட்டத்தில் இருக்கும். தோட்டம் இல்லாதவர்கள் கூட, சிறிய தொட்டி அல்லது கெமிக்கல் டப்பாவில் மண் போட்டு, வராண்டாவிலோ, பால்கனியிலோ இந்தச் செடிகளை வளர்த்தால், அவ்வப்போது கஷாயம் செய்ய பறித்துக் கொள்ளலாம். முதலில் சிறிய பொடிகளைக் கலந்து மாவு சல்லடையில் சலித்து, காற்றுப் புகாத பாட்டிலில் வைக்கவும். கிடைக்கும் மருந்து இலைகளை (துளசி, வெற்றிலை) நன்றாகக் கழுவி 1 டம்ளர் தண்ணீரில் கொதிக்க விடவும். அத்துடன் சலித்து வைத்த கஷாயப் பொடியில் 1 ஸ்பூன் சேர்த்து, கொதிக்க விட்டு, வடிகட்டி, சூடாகவே கொடுக்கவும். பெரியவர்கள் அப்படியே குடிக்கலாம். கைக் குழந்தைக்கு கஷாயப் பொடி சிட்டிகை எடுத்து, தேன் குழைத்து நாக்கில் தடவலாம்.
வெற்றிலை, கற்பூரவல்லி போன்றவற்றை மிக்ஸியில் அரைத்தும் கொதிக்க வைத்து வடி கட்டலாம். அடம் பிடிக்கும் குழந்தைகளுக்குக் கூட அழுத்தி வைத்து, பாலாடையால் போட்டினால், வாந்தி எடுக்கும்போது சளி முழுவதும் வெளியில் வந்து விடும். இத்துடன் சிறிது ஜாதிக்காய் பொடி சேர்த்துக் கொடுத்தால் நல்ல தூக்கம் வரும். இந்தக் கஷாயம் 3 வேளை கொடுத்தாலே எத்தகைய சளி, கபம் இருந்தாலும் பிரிந்து, கரைந்து வெளியேறி விடும்.

மேல்கூறிய கஷாயப் பொடியை காப் ஷிரப் போல் மாத்திரையாகவும், தொண்டைக்கு இதமாக, வாயில் அடக்கிக் கொள்ளுமாறு தயாரிக்கலாம். பாகு வெல்லம் வாங்கி துருவி சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து, கொதிக்க விட்டு, வடிகட்டி, பின் கெட்டிப்பாகு (உருண்டைகள் செய்வது போல) வைத்து, தேவையான அளவு பொடியைப் போட்டு கலந்து உருட்டி வைக்கவும். இருமல் மாத்திரை போன்று கையில் எடுத்துச் செல்லவும் முடியும். வாயில் அடக்கிக் கொண்டால் இருமல் வராமல் இருக்கும்.

பாலில் கலந்து காப்பிக்குப் பதில் சுக்குக்காப்பி போல் குடிப்பதற்கு சுக்கு 50 கிரா, மிளகு 50 கிராம், சிறுது நீட்டு மஞ்சள் 50 கிராம், கண்டதிப்பிலி, ஏலக்காய் 10 கிராம் இவற்றுடன் சிறிது தனியாவும், சேர்த்து வெறும் வாணலியில் சூடாகப் புரட்டி எடுத்து, அம்மி அல்லது உரலில் பெரிய துண்டுகளை நறுக்கிக்கொண்டு, பிறகு மிக்ஸியில் நைஸாக பொடி செய்து சலித்து வைத்துக்கொண்டால், சூடான பாலில் சிறிது பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை அல்லது தேன் கலந்து, இந்தப் பொடியையும், அப்படியே சேர்த்துக் கலக்கி குடிக்கலாம். இருமி இருமி நெஞ்சு வலி வந்தவர்களுக்கும் மிகவும் இதமா இருக்கும். இரவு குடித்தாலும் நல்ல தூக்கம் வரும். சலித்த காப்பியை வீணாக்காமல் பாலில் கலந்தோ, டீயில் கலந்தோ குடிக்கலாம். இந்த சுக்கு காப்பி எல்லா வயதினருக்கும் ஏற்றது. பக்க விளைவுகள் இல்லாதது. காரம் அதிகம் வேண்டாதவர் கூட, சுக்கின் அளவு குறைத்துக் கொள்ளலாம்.