Tuesday, July 12, 2011

அரசாங்க வேலை யாருக்கு கிடைக்கும்? கிடைக்க எளிய பரிகாரம்!

அரைக் காசு உத்தியோகமாக இருந்தாலும் அரண்மனையில் வேலை செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் படித்து முடித்துவிட்ட அனைவருக்கும் அரசாங்கத்தில் வேலை கிடைக்காது. ஜாதகத்தில் அரசாங்க வேலை பெறுவதற்குரிய கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே அது அமையும். அப்படிப்பட்ட ஜாதகர்கள் ஏழை வீட்டில் பிறந்திருந்தாலும்
கல்வியில் உயர்ந்து அரசு வேலையை அடைவார்கள்.

ஜாதகத்தில் பத்தாம் இடம் தொழிலைக் குறிக்கும் இடம். லக்னத்துக்கு பத்தாம் இடத்துக்குரிய கிரகம் வலுப்பெற்று குரு பகவான் பார்வை பெற வேண்டும். அரசு வேலைக்குரிய கிரகம் செவ்வாய் பகவான். இந்த செவ்வாய் கிரகம் ஜாதகத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலும், லக்னம் அல்லது ராசிக்கு 3,6,9,10,11 ஆகிய இடங்களில் அமர்ந்திருந்தாலும் அந்த ஜாதகர் அரசாங்கப் பதவியை அடைவார். அரசாங்கத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவிகளை வகிப்பவர்களின் ஜாதகத்தில் குரு பகவானும் செவ்வாய் பகவானும் வலுவாக இருப்பார்கள். மேற்கண்டவாறு ஜாதகம் அமையப் பெற்ற விவரத்தை நல்ல ஜோதிடரிம் காட்டி அறிந்து கொள்ளலாம். கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்து வந்தால், அரசுப் பணி தடையின்றிக் கிடைக்கும். இப்படிப்பட்ட ஜாதகம் அமையப் பெறாதவர்களுக்கு அரசுப் பணி கிடைப்பது அரிதாகும்.

பரிகாரம்:

1. நல்ல முறையில் ஜாதகம் அமையப் பெற்ற குழந்தைகள் கல்வி பயிலத் தொடங்கும் காலம் முதல் திங்கட்கிழமைதோறும் முருகனுக்கு விரதம் இருந்து வந்தால் கல்வியில் உயர்ந்து வரலாம். படித்து முடித்தவுடன் அரசுப் பணி கிடைக்கும்.

2. நல்ல முறையில் ஜாதகம் அமையப் பெற்று, சனி பகவான் பதவியைக் கொடுப்பவராக இருந்தால் சிறைத் துறை, தண்டனை தருதல் போன்ற பதவிகளுக்கு உரியவர்கள் இப்படிப்பட்டவர்கள் கல்வி பயிலும் காலம் தொட்டு சனிக்கிழமைதோறும் விரதமிருந்து வந்தால் கல்வியில் உயர்ந்து வரலாம். படித்து முடித்தவுடன் அரசுப் பணி கிடைக்கும்.

3. நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் போது, ஓம் நமோ நாராயணாய நமக என்று 108 முறை சொல்லிக் கொண்டே போனால், நேர்முகத் தேர்வில் கேட்கும் கேள்விகளுக்கு கிருஷ்ணபகவான் துணைக்கு வந்து, அறிவுப்பூர்வமான பதில்களைச் சொல்ல வைப்பார். வெற்றி எளிதில் வரும்.